சுமங்கலி பிரார்த்தனை!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

திருமணம் போன்ற நல்ல விடயங்கள் நடைபெறும் போது நிகழ்த்தப்படும் ஓர் வழிபாடு சுமங்கலி பூஜை என்பதாகும். இங்கு கணவனுடன் நிறைந்த வாழ்வு வாழும் சுமங்கலி ,அன்னை பராசக்தியாக, மகாலட்சுமியாக பார்க்கப் படுகிறா.

அம்பிகையின் திவ்விய நாமங்களை சொல்லி வழிபடும் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமம் 967 வது திருபெயராக சுவாஷினி என்ற பெயரை அம்மைக்கு கொடுத்து சிறப்பிக்கிறது. சுவாஷினி என்றால் மங்கலம் நிறைந்தவள் என்பது பொருளாகும். சுவாஷினி என்பதே சுமங்கலியாக மாறியது எனலாம். கணவனோடு கூடி இல்லறத்தை நல்லறமாக நடத்துகின்ற பெண்களே சுமங்கலி என்று அழைக்கபடுவார்கள்.

நல்ல இல்லறம் நடத்துகிற பெண்ணை இந்துமதம் பராசக்தியின் வடிவமாகவே காணுகிறது. எனவே அத்தகைய பெண்களை வழிபடுவதை பராசக்தி வழிபாடாகவே ஏற்றுகொள்ளபடுகிறது. வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்ல தலைமுறையை ஈன்று கொடுக்கின்ற பெண் உலகத்து நாயகி என்பதில் மாற்றுகருத்து இல்லை அவளை வழிபடுவதும் அன்னையை வழிபடுவதும் ஒன்றுதான்.

பூஜைக்காக அழைக்கப்படும் பெண்களுக்கு நல்ல முறையில் வரவேற்பு கொடுக்க வேண்டும். பிறகு அவர்களை தாம்பாள தட்டில் நிற்க வைத்து இல்லத்தலைவி பாத பூஜை செய்ய வேண்டும். குங்குமம் சந்தனம் மலர்கள் கொடுத்து பெண்களை மனையில் மரியாதையோடு அமர செய்ய வேண்டும். பிறகு ஒவ்வொரு பெண்ணையும் அன்னை பராசக்தியாக கருதி தீபாராதனை செய்து வழிபட வேண்டும்.

ஒவ்வொரு பெண்ணிடமும் தனித்தனியாக பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். வழிபாடு முடிந்த பிறகு புடவை ரவிக்கை மஞ்சள் கண்ணாடி குங்கும சிமிழ் புஸ்பம் வெற்றிலை பாக்கு தட்சணை கொடுத்து உபசரிக்க வேண்டும்.

பூஜைக்கு வந்த பெண்களுக்குக் கட்டாயம் அறுசுவை உணவு கொடுக்க வேண்டும். அவர்கள் கையலம்பக் கண்டிப்பாக நீர்வார்க்க வேண்டும். அதன் பிறகு மீண்டும் ஒருமுறை அவர்களை வணங்கி வழியனுப்ப வேண்டும். அதன் பிறகு தான் பூஜை நடத்திய வீட்டுகாரர்கள் உணவு எடுத்துகொள்ள வேண்டும்.

தகவல் தொகுப்பு: பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா.
சுமங்கலி பிரார்த்தனை!
Scroll to top