விநாயகர் வழிபாட்டின் மகத்துவம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
விநாயகர் வழிபாட்டின் மகத்துவம்!!!
மாதந்தோறும் வளர்பிறை சதுர்த்தசியில் சுக்ல சதுர்த்தி விரதமும், தேய்பிறை சதுர்த்தசியில் சங்கட ஹர சதுர்த்தி விரதமும் உண்டு என்கிறது புராணம்.
சதுர்த்தி, விநாயக வழிபாட்டின் சிறந்த நாள் (சதுர்த்தி என்றால் நான்கு). 4-வது புருஷார்த்தத்தை (மோட்சம்- வீடுபேறு) எளிதாக எட்டவைப்பவர் விநாயகர். உலக இன்பத்துடன் பேரின்பத்தையும் அளிப்பவர்!
””சங்க சக்ரோ ஜ்வலகரம் கிரீட்டத்பாசி
மஸ்தகம் ஜகானந்த ஜனனம்
மதுபாஸ முபாஸ்மஹே”’
விநாயகப் பெருமானின் மஸ்தகம் பிரம்மம்; மஸ்தகம் என்றால் என்ன? பருத்த சிரசு என்று பொருள்!!!
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் என்பதைக் குறிக்கும். மிகப் பெரியது எனும் பொருளுக்கு ஏற்ப, அவரின் யானை முகம் எல்லோருக்கும் புலப்படும்படியாகத் தென்படுகிறது என்று விவரிக்கிறது புராணம் (கண்டாதோ மாயயா யுக்தம் மஸ்தகம் பிரம்மவாசகம்).
விநாயகரின் கரத்தில் இருக்கும் கொழுக்கட்டைக்கு மோதகம் என்றும் பெயருண்டு. மோதகஹஸ்தா எனப் போற்றுகிறது ஒரு செய்யுள். மகிழ்ச்சியைத் தரும் என்பதே மோதகத்தின் தாத்பரியம். ஆக, மகிழ்ச்சியை (மோதகம்) கையில் ஏந்தித் தயாராக வைத்திருக்கிறார் ஸ்ரீவிநாயகர். நமது வேண்டுதலை எதிர்பார்க்காமல், நமக்கு வேண்டியதைத் தந்தருளும் வள்ளல் அவர். கொழுக்கட்டைக்கு உள்ளே இருப்பது பூரணம்; அதாவது நிறைவு! அது இனிப்பாக இருக்கும். ‘இனிப்பு எல்லா உயிரினங்களுக்கும் பிடிக்கும்’ என்கிறது புராணம் (இஷீகண்ட ஸமுத்பூதம் ஸர்வப்ராணிமனோகரம்.).
பூரணத்தை மறைத்திருக்கும் மாவு- வெள்ளை நிறம். அந்த நிறத்தின் குணம் சாத்விகம். மோதகம், உருண்டை வடிவில் இருக்கும்தானே?! அதைத் தன் கரத்தில் ஏந்தியிருப்பதன் மூலம், ‘உலகம் அனைத்துக்கும் மகிழ்ச்சியை அளிப்பேன்’ என விநாயகர் சொல்லாமல் சொல்கிறார் என்றால், அது மிகையல்ல!
’21 உளுந்துமணி அளவு, புருஷனின் உருவம்’ என சூட்சும புருஷனைச் சுட்டிக்காட்டுகிறது வேதம் (ஞகவிம் சோவைபுருஷ). அது, ஆனைமுகனுக்கும் பொருந்தும்! ஆகவே, 21 இலைகள், 21 பூக்கள், 21 அருகம்புல் ஆகிய வற்றால் விநாயக சதுர்த்தி தினத்தில் சிறப்பாக பூஜிப்பர்.அவற்றில், எருக்க இலையும் எருக்கம்பூவும் அடங்கும்! எருக்கம் பூவை தினமும் பயன் படுத்துவதில்லை!
பரம்பொருள், தான் படைத்த இலைகளையும் பூக்களையும் ஏற்று மகிழ்கிறார். இயற்கைச் செல்வமான பொருட்களை, இயற்கைக்குப் படைத்து விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் அற்புதத் தருணம் விநாயக சதுர்த்தி; இந்த நாளில் பரம்பொருளை வணங்குவது விசேஷம்!
மிகப் பெரிய உடல் கொண்ட யானை, காட்டில் இலைகளைச் சாப்பிட்டு உயிர் வாழும். அசைவ உணவு அங்கு கிடைத்தாலும், அதைத் தொடாது. யானையின் இயல்பு நமக்கு உணர்த்தும் உன்னதப் பாடம் இது!
விநாயக சதுர்த்தி நாளில் மட்டுமே இந்தச் சிறப்பு வழிபாடு உண்டு. தினமும் எருக்க மாலை அல்லது இலையைப் பயன்படுத்தினால், இதன் சிறப்பு மறைந்துவிடும்.
காரடையான் நோன்பு – அடை, விநாயக சதுர்த்தி – கொழுக்கட்டை, வருஷப் பிறப்பு அன்று சாப்பிடும் வேப்பம்பூ பச்சடி, திருவாதிரைக் களி ஆகியவற்றைத் தினமுமா சாப்பிடுகிறோம்?! இல்லையே!!!
அப்படித்தான், விநாயக சதுர்த்தி அன்று மட்டும் எருக்கம்பூ மற்றும் இலையை பிள்ளையாருக்கு சார்த்தி வழிபடுவதும்!
இடையூறுகள் விலகி நமது எண்ணங்கள் ஈடேற, விநாயகரை வழிபடுவதுதான் முதன்மையானது என்பது நாமறிந்ததே! ஒளவையின் உள்ளத்தை அறிந்த பிள்ளையார், அவருக்கு தெய்விக உருவத்தை அளித்தருளினார். உண்மையான (இளமையான) வடிவம், ஒளவையின் செயல்பாட்டுக்குத் தடையாக இருக்கும் என்பதால், முதுமையைத் தந்தருளினாராம் விநாயகர். நாமும் ஆனைமுகனை வணங்கிப் பேரின்பத்தைப் பெறுவோம்!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
No photo description available.
விநாயகர் வழிபாட்டின் மகத்துவம்!!!
Scroll to top