தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
சந்தோஷம் தரும் சனி பகவான் ! பயம் ஏன் ???
சனியைப் போல கொடுப்பாரும் இல்லை; அவரைப் போல கெடுப்பாரும் இல்லை’ என்றொரு சொல் வழக்கு உண்டு. இதனால், நம்மில் பலரும் சனி பகவான் என்றாலே பயந்து நடுங்குகிறோம். இது தவறு!
தீர்க்காயுளைத் தனது பொறுப்பில் வைத்திருப்பதால் ‘ஆயுள்காரகன்’ எனப் போற்றப்படும் சனிபகவான்…கருணை வள்ளல்! முன்ஜன்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களைத் தந்து, நம் பாவச் சுமையைக் களையும் கிரக மூர்த்தி இவர்.
சூரியபகவானுக்கும் சாயாதேவிக்கும் மைந்தனான இவர், தொட்டில் குழந்தையாக இருந்தபோதே இருகரம் கூப்பி சிவபெருமானை வணங்கியவர் என்ற பெருமை கொண்டவர்.
வானியல்படி, சூரியனிடமிருந்து அதிக தூரத்தில் உள்ள பாதையில் சுற்றி வரும் சனி, மற்ற கிரகங்களைவிட மிக மெதுவாகச் சுழல்கிறார். இவர், ஒரு ராசியைக் கடக்க சுமார் இரண்டரை ஆண்டு காலம் ஆகும்; ராசி மண்டலத்தைக் கடக்க சுமார் 30 ஆண்டுகள் பிடிக்கும். எனவே இவரை, ‘மந்தன்’ என்பார்கள். காரி, முடவன், காகம் ஆகிய பட்டப் பெயர்களும் இவருக்கு உண்டு.
காசிக்குச் சென்ற சனிபகவான், அங்கே லிங்கப் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்து வந்தாராம். இதன் பலனால் சிவபெருமானின் அருளைப் பெற்று, இவர் நவக்கிரக வரிசையில் இடம்பெற்றதாகவும், மகேஸ்வரன் அருளால் இவருக்கு ‘ஈஸ்வர’ பட்டம் கிடைத்ததாகவும் சொல்கின்றன புராணங்கள்.
தன்னைப் போன்றே சிவனருள் பெற்ற அடியவர்களுக்கு எல்லா நலன்களையும் அள்ளி வழங்கும் மூர்த்தி இவர். இன்னொரு விஷயம் தெரியுமா? ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் அமர்ந்திருக்கிறார் எனில், நாட்டுக்கே தலைவராகும் வாய்ப்பு அந்த நபருக்குக் கிடைக்குமாம்!
அது மட்டுமா? மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் பொருட்களை வெளிக்கொணரும் அரிய சக்தியையும், அந்தத் துறையில் பேரும் புகழும் அடைய வைக்கும் சிறந்த அறிவையும் தரும் ஆற்றல் பெற்றவர் சனி பகவான். தவிர… அந்நிய மொழிகளில் பாண்டித்தியம் பெற, விஞ்ஞானத்தில் தேர்ச்சி பெற, மருத்துவத்துறையில் சிறப்படைய இவரின் அருள் தேவை. ஜ்யோதிஷ் க்ரந்த எனும் வடமொழி நூலும், கௌடில்யரின் (சாணக்கியர்) அர்த்தசாஸ்திரமும் சனி பகவானின் பெருமைகளையும் மனித வாழ்வில் அவர் எப்படி பங்கு வகிக்கிறார் என்பதையும் அற்புதமாக விளக்குகின்றன.
கிரகங்களில் சேவகனான இவர், மனித உடலில் நரம்பு ஆவார். தொடை, பாதம், கணுக்கால் இவற்றின் சொந்தக்காரர். பஞ்சபூதங்களில்- காற்று! ஊழியர்களைப் பிரதிபலிப்பவர். பாப கிரக வரிசையில் முதலிடம் வகிப்பவர். இவரின் நட்சத்திரங்கள்- பூசம், அனுஷம், உத்திரட்டாதி.
உலோகப் பொருள்களில்- இரும்பு இவருடையது. குள்ளமான தோற்றம் கொண்டவரான சனிபகவான் கருமை நிறம் உடையவர். கிரக ரத்தினங்களில் நீலக்கல் இவருடையது. கருப்பு வஸ்திரம் அணிபவர். காக்கை, எருமை வாகனம் ஆகியவற்றில் வலம் வருபவர். சமித்துகளில் வன்னி இலைப் பிரியர். கைப்புச் சுவையில் அலாதி பிரியம் உண்டு. எள் அன்னம் இவருக்கு மிகவும் பிடிக்கும்.
சனீஸ்வரனின் குணநலன்களை விவரிக்கும் நூல்கள், அவரால் விளையும் பலாபலன்களையும் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.
இப்படிப்பட்ட பெருமைகளுடன் திகழும் சனீஸ்வரர், தங்கள் ஜாதகத்தில் பலமாக அமையப் பெறவில்லையே’ என்று எவரும் வருந்தத் தேவையில்லை!
மிக எளிமையான பரிகாரங்கள் செய்து, சனீஸ்வரரை வழிபட்டு துன்பங்கள் நீங்கப் பெறலாம்.
கீழே இவற்றில் ஒன்றை என்றாலும் மனனம் செய்து தினமும் சொல்லி வாருங்கள் , பலன் கிடைக்கும் நண்பர்களே!!!
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்!
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தந்நோ சனிஹ் ப்ரசோதயாத்!
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தந்நோ சனைச்சர ப்ரசோதயாத்!
ஓம் சனீஸ்வராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தந்நோ சனிஹ் ப்ரசோதயாத்!
ஓம் சதுர்புஜாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com

சந்தோஷம் தரும் சனி பகவான் ! பயம் ஏன் ???