நல்லன அருளும் நந்தி தரிசனம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
நல்லன அருளும் நந்தி தரிசனம்!
நந்தி என்ற சொல்லுக்கு எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இவர் ஒரு சித்தர். இளமையும் திட்பமும் வாய்ந்தவர். சாந்தமான குணம் படைத்தவர். தர்மத்தின் வடிவமாய்த் திகழ்பவர். ஒப்புவமை இல்லாத பெருமை நிறைந்தவர். இந்திராதி தேவர்களாலும் முனிவர்களாலும் போற்றி துதிக்கப்படுபவர்.
சிவாயநம’ எனும் ஐந்தெழுத்தின் உருவத்தைக் கொண்டவர். அதாவது, பஞ்சாட்சரத்தின் வடிவமானவர். ஒப்பில்லாத நான்கு வேதங்களையும் நான்கு பாதங்களாகக் கொண்டவர். ஊழிக்காலத்தில் இறைவனுக்கு வாகனமாக இருந்து அவரைத் தாங்கும் பேறு பெற்றவர். நிரந்தரமான இடத்தை உடையவர். வில்லாளிகளில் மேன்மை உடையவர். பிறரால் வெற்றிபெற முடியாதவர்.
எக்காலத்திலும் சிவபெருமானை வணங்கிய தோற்றத்துடனும், அவரது திருமுகத்தைப் பார்த்துக் கொண்டும் இருக்கும்படியான வரத்தைப் பெற்றவர். ஸ்ரீநந்திதேவர், இறைவனிடம் சென்று தேவர்களின் குறைகளை முறையிட்டு அவர்களின் துன்பத்தைப் போக்குபவர். அதனால்தான் பிரதோஷ காலத்தில் ஸ்ரீநந்தி எம்பெருமானுக்கு முதலில் பூஜை நிகழ்கிறது.
சிவ தரிசனத்தில் முதலாவதாக நாம் செய்ய வேண்டியதும் மிக முக்கியமானதாகக் கருதப்படுவதும் ஸ்ரீநந்தி எம்பெருமானைத் தரிசிப்பதே ஆகும். நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே இறைவனைத் தரிசிப்பது, நமது வேண்டுகோளை நந்தி எம்பெருமான் ஈசனுக்குத் தகுந்த நேரத்தில் பக்குவமாக எடுத்துச் சொல்லி நிறைவேற்றி வைப்பார் என்பதால்தான்.
ஸ்ரீநந்தி எம்பெருமானுக்கு சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர் ஆகிய ஏழு பேர் மாணவர்களாக இருந்தனர். எட்டாவது மாணவராக திருமூலர் திகழ்கிறார். இந்த எட்டு சீடர்களும் சைவ சமயத்தின் மேன்மையை விளக்கவும், சிவ வழிபாட்டினை பரப்பவும், சிவப்பரம்பொருளின் பெருமையைப் பற்றியும், ஸ்ரீநந்தி எம்பெருமானின் மரபினைப் பற்றியும், தங்கள் அனுபவத்தின் மூலம் எடுத்துச்சொல்வதற்காக நமது தேசத்தின் பல பகுதிகளுக்கும் சென்று வந்தனர்.
ருத்திரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்கவாத்யப் ப்ரியன், சிவ வாகனன், கருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன் ஆகியன நந்திதேவரின் திருப்பெயர்கள்.
இத்தகைய சிறப்புகளோடு திகழும் நந்திதேவரை பிரதோஷக் காலத்தில் ஆலயத்துக்கு சென்று தரிசித்து வழிபட்டு அவரின் திருவருளைப் பெறுவது, நமது வாழ்வைச் சிறப்பாக்கும். சனிப்பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டு நந்திதேவரைத் தரிசித்து, நல்லன எல்லாவற்றையும் வரமாகப் பெற்று மகிழுங்கள்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள ஆன்மீக மின்இதழ் ஆசிரியர் . www.modernhinduculture.com
No photo description available.
நல்லன அருளும் நந்தி தரிசனம்!
Scroll to top