தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
கோவில்களில் கொடியேற்றம் ஏன் ?
தாயகத்திலும், தமிழ் நாட்டிலும் , புலம் பெயர் நாடுகளிலும் இப்போது பல ஆலயங்களில் கொடி ஏற்றத் திருவிழாக்கள் நடைபெறுவதைக் காண்கிறோம். இது சம்பந்தமாக ஆன்மீக நூல்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்!
அசுர சக்திகளை அகற்ற, சிவகணங்களை கோவிலுக்குள் அழைக்க, ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கவே கொடி ஏற்றம் நடத்தப்படுவடுவதாக ஆன்மீக நூல்கள் குறிப்பிடுகின்றன!
பொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை குறிக்கும். பழங்காலத்தில் ஒரு மன்னன் பக்கத்து நாடு மீது படையெடுத்து சென்று அந்நாட்டை பிடித்தால், அங்கு தன் அதிகாரம் வந்து விட்டதை குறிக்கும் வகையில் தனது கொடியை பறக்க விடுவான்.
அதே போன்று தான், திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.
இது மக்கள் மன நிலையில் மாற்றம் ஏற்படுத் தவும், விழா சமயத்தில் வெளியாட்களால் நோய் பரவல் ஏற்படுவதையும் தடுக்கிறது.
இதை கருத்தில் கொண்டே கொடி ஏற்றுவதற்கு முன்பு கல்பம், அனுகல்பம் என்ற இருவகை சடங்குகளை செய்வார்கள்.
கொடி ஏற்றுவதற்கு முன்பு தேவதைகளை ஆவாகனம் செய்வது கல்பம் எனப்படும்.
கொடி ஏற்றிய பிறகு தேவதைகளை ஆவாகனம் செய்வது அனுகல்பம் எனப்படும். இந்த சடங்குகள் மூலம் கோவில் கொடி மரங்கள் சக்தி மிக்கவைகளாக மாறுகின்றன.
இத்தகைய மரத்தில் கொடி ஏற்றுவது இறைவனின் படைப்புத் தொழிலை குறிப்பதாக சொல்கிறார்கள்.
கொடி மரம் என்பது இறைவன், கொடிக் கயிறு சக்தி, கொடித் துணி ஆத்மா, கொடி ஏற்ற பயன்படுத்தும் தர்ப்பைக் கயிறு பாசம் ஆகியவற்றை குறிக்கும்.
கோவிலில் கொடி ஏற்றும் போது குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க, தர்ப்பைக் கயிற்றுடன் வெள்ளைத் துணியை ஏற்றி வளைத்து, சுற்றிக் கட்டுவார்கள் !
இது உயிர்களையும், அறத்தையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதை உணர்த்துகிறது. இறைவனிடம் பாசக்கட்டு அறுந்து போகும்படி நம்மனதை பலியிட வேண்டும், என்பதற்காக ஆன்மாவை பாசக்கயிறு சுற்றியுள்ளதை காட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றப்பட்டிருக்கும்.
இல்லற வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் நாம், எல்லோருமே பாசத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.
தர்ப்பைக் கயிறு எனும் பாசத்தால், கொடி துணி எனும் உயிர் கட்டப்பட்டுள்ளது.
அந்த உயிர் இறைவன் திருவடியை அடைதல் என்ற தத்துவத்தை கொடிஏற்றம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
நமது உயிர் இறைவன் திருவடியை தஞ்சமடைய வேண்டுமானால் நம் மனமும் ஒரு முகமாக நிலை நிறுத்தப்பட வேண்டும். மனமும் உயர்ந்த நிலையில் கொடிமரம் போல உயர்ந்து நிற்க வேண்டும்!!
இதை உணர்த்த கொடி மரம் நேராக நிமிர்ந்து நிற்பதாக சொல்கிறார்கள். இன்னொரு வகையில் சொல்வதென்றால் அசுர சக்திகளை அகற்ற, சிவகணங்களை கோவிலுக்குள் அழைக்க, ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கவே கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.
அதனால் தான் கொடி மர உச்சியில், அந்தந்த ஆலய இறைவனின் வாகனம் ஒரு அடையாள சின்னமாக அமைக்கப்படுகிறது.
சிவன் கோவிலில் நந்தி, பெருமாள் கோவிலில் கருடன், அம்மன் கோவிலில் சிங்கம், விநாயகர் கோவிலில் எலி, முருகன் கோவிலில் மயில், சாஸ்தா கோவிலில் குதிரை உருவம் அமைக்கப்படும்.
.
இந்த உருவங்களைத்தான் அந்தந்த ஆலயங்களில் கொடிகளில் வரைந்து ஏற்றுவார்கள். கீழ் நிலையில் உள்ள ஆன்மாவை இறைவன் உயர்நிலைக்கு உயர்த்துகிறான் என்பதை இது காட்டுகிறது.
இப்படி பல்வேறு வகைகளில் சிறப்புடைய கொடி மரத்துக்கு மூல லிங்கத்துக்கு செய்யும் அபிஷேகம், ஆராதனை, நைவேத்தியம் முதலிய அனைத்தும் செய்ய வேண்டும் என்பது விதியாகும்.
அந்த அளவுக்கு கொடி மரம் மூலவருக்கு நிகரானது. இன்னும் சொல்லப்போனால், கொடி மரம் அருகில் நின்று நாம் செய்யும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடிப்பகுதியான சதுரம், அதற்கு மேல் எண்கோணவேதி அமைப்பு மற்றும் தடித்த உருளை பாகம் என இந்துக் கோவில் கொடிமரம் மூன்று பாகங்களை உடையன. இதில் சதுரப்பகுதி பிரம்மாவினையும், எண்கோணவேதி அமைப்பு திருமாலையும், உருளையமைப்பு சிவனையும் குறிப்பதாக ஆன்மீக நூல்கள் தெரிவிக்கின்றன!!!
கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் அகந்தையை (ஆணவம், கன்மம், மாயை) கொடிமரத்தின் முன் சமர்ப்பித்துவிட்டு, தூய்மையான ஆத்மாவாக மூலவரையும் கொடி மர உச்சியையும் தரிசிக்க வேண்டும் என்பதை இது அறிவுறுத்துகிறது.
கொடிமரம் மூலவரை நோக்கி நேராக அமைக்கப்படுவதால், இது பிரபஞ்சத்தில் உள்ள இறை ஆற்றலை (தெய்வீக அதிர்வுகள்) ஈர்த்து, கோயில் முழுவதும் நிலைநிறுத்த உதவுகிறது.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com

See less