தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
சுப காரியங்கள் , மற்றும் திருமணங்கள் , புதுமனை குடிபுகல் , மணப் பெண் வீட்டுக்கு வருகை இந்த நிகழ்வுகளின் போது வலக் காலை எடுத்து வைத்து வரச் சொல்வது, ஏன்? அறிவோம்!!
உணவு உட்கொள்ள வலக் கரம் பயன்படுகிறது. கொடை வழங்க வலக் கை முந்துகிறது. பிறருக்கு உதவ வலக் கரத்தை நீட்டுகிறோம். மனைவியை வலக் கரத்தால் ஏற்றுக் கொள்கிறோம் (பாணிக்ரஹணம்). அறத்தை செயல்படுத்தும் வேளையில், மனைவியை வலப் பக்கம் இருத்துகிறோம். வில்லில் தொடுத்த அம்பை வலக் கரம் இயக்குகிறது. கடவுளுக்கு வலக் கரத்தால் பணிவிடை செய்கிறோம். வரவேற்பிலும், விடையளிப்பதிலும் வலக் கரம் செயல்படுகிறது. இப்படி, செயல்பாடுகளில் இயல்பாகவே வலக் கரம் முந்திக் கொள்ளும்.
இயற்கைக்கு மாறாக இடக் கையைப் பயன்படுத்துபவர்களும் உண்டு. அது விதிவிலக்கு. மூளையின் உத்தரவை இடக் கை முந்திக் கொண்டு செயல்படுத்த, பிறகு அதுவே பழக்கமாகி நிலைத்து விடும். இப்படித்தான் இடக் கை, வலக் கையின் இடத்தைப் பிடித்திருக்கிறது எனலாம். இடக் கையைப் பயன்படுத்துவதை அநாகரிகமாகக் கருதுபவர்களும் உண்டு. சுத்தம் செய்ய இடக் கை பயன்படுவதால், மற்ற காரியங்களில் அதற்கு முன்னுரிமை இல்லை என்று எண்ணுபவர்களும் உண்டு.
கால்களது செயல்பாடு, கைகளைப் போல் அல்ல. வலக் காலும், இடக் காலும் இணைந்துதான் நடக்க வேண்டும். ஒன்றை பூமியில் அழுத்தி, மற்றதை முன்னே வைக்க வேண்டும். அப்போது, வலக் காலை முன்னே வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது.
‘நல்ல காரியங்களில், முதல் அடி எடுத்து வைப்பது வலக் காலாக இருக்க வேண்டும்!’ என்று சாஸ்திரம் கூறும். பல முன்னேற்றங்களுக்கு வலக் கையைப் பயன்படுத்திய அனுபவம் நமக்கு இருப்பதால், ‘முதலில் வலக் காலை எடுத்து வைப்பது முன்னேற்றத்துக்கு உதவும்!’ என்று நம் மனம் நம்பி விடும். உடலின் இரு கூறுகளில் இடக் கூறை விட, வலக் கூறு பலம் பொருந்தியது என்று வேதம் கூறும் (தஸ்மாத் தக்ஷிணோர்த்த ஆத்மனோவீர் யாவதிதர:).
பக்கவாதம் தாக்கும்போது உடலின் வலப்பக்கம் வீழ்ந்தால், அது நமது நம்பிக்கையை இழக்கச் செய்யும். பலமான பகுதி வீழ்ந்ததாக ஆயுர்வேதம் கூறும். வலக் கூறுகளுக்கு வேதம் பெருமை அளிக்கிறது. எனவே, புதுமனை புகு விழா போன்ற நிகழ்வுகளில், முதலில் நுழைய வேண்டியது காலாக இருப்பதால், ‘வலக் காலை எடுத்து வைத்து நுழைய வேண்டும்’ என்று பரிந்துரைக்கிறது தர்மசாஸ்திரம்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
சுபகாரியங்கள்,மணப் பெண் வீட்டுக்கு வருகை இந்த நிகழ்வுகளில் வலக்கால் ஏன் ???