தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
திருகோணமலையும்… திருக்கேதீச்சரமும்..!
புராணச் சிறப்பு மிகுந்த பல்வேறு சிவத்தலங்களை தரிசித்து சிந்தை மகிழ்ந்த திருஞானசம்பந்தர் ராமேஸ்வரம் வந்தார். அங்கே கோயில் கொண்டிருக்கும் ஈஸ்வரனை பாடிப்பரவி வழிபட்டவர், அற்புதமான அந்தத் தலத்தில் இருந்தபடியே, மற்றுமொரு சிவத்தலத்தையும் போற்றிப் பாடினார்.
‘கோயிலுஞ் சுனைங் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே…’ என்று அவர் மனமுருகிப் பாடி வழிபட்டது, இலங்கைத் தீவின் திருக்கோணமலை ஈஸ்வரனை!
கொழும்பில் இருந்து சுமார் 256 கி.மீ தூரத்தில் உள்ள இந்தத் தலத்தை அருணகிரிநாதர், வள்ளலார் ஆகியோரும் பாடியுள்ளனர். 3,297 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயிலின் இறைவன்- ஸ்ரீகோணேஸ்வரர்; இறைவி ஸ்ரீமாதுமையாள்.
ஆதிகாலத்தில் திருக்கோணமலையில்… உச்சிக் கோயில், இடைக் கோயில், அடிவாரக் கோயில் என மூன்று கோயில்கள் இருந்தனவாம். 1624-ல் போர்த்துகீசியர்களின் தாக்குதலால் இந்த ஆலயம் பெரிதும் சிதிலம் அடைந்தது. 1950-ல் காசியிலிருந்து லிங்கம் கொண்டு வந்து, இங்கு எழுந்தருளச் செய்தனர். அப்போது கிணறு ஒன்று தோண்டப்பட, ஸ்ரீமாதுமையாள் சமேத ஸ்ரீகோணேஸ்வரர், ஸ்ரீசந்திர சேகரர், ஸ்ரீபார்வதியாள், பிள்ளையார் மற்றும் அஸ்திரதேவர் விக்கிரகங்கள் கிடைத்தனவாம். அதன் பிறகு, இந்தக் கோயிலில் 1963-லும் 1981-லும் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறும் ஸ்ரீகோணேஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
ஆடி அமாவாசையன்று, நகரின் மற்ற ஆலயங்களில் இருந்து வரும் மூர்த்தியர் சூழ, ஸ்ரீகோணேஸ்வரர் கடல் நீராடும் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும். அதேபோல் இங்கு நிகழும் ஆகாச பூஜையும், மலை பூஜையும் தரிசிக்கவேண்டிய வைபவம்!
பாடல் பெற்ற சிவத்தலங்களில் இரண்டு இலங்கையில் உள்ளன. ஒன்று திருக்கோணமலை; மற்றொன்று திருக்கேதீச்சரம். இது இலங்கையின் மேற்குக் கரையில் உள்ளது. கொழும்பு- தலைமன்னார் ரயில் மார்க்கத்தில் (சுமார் 320 கி.மீ தூரத்தில்) திருகேதீச்சரம் ரயில் நிலையம் உள்ளது. திருக்கோணமலையில் இருந்து சுமார் 173 கி.மீ. தூரம்.
கேது வழிபட்டதால் திருக்கேதீச்சரம் என்று பெயர். இறைவன் திருக்கேதீஸ்வரர்; அம்பாள்- ஸ்ரீகௌரியம்மன்.
இங்கு கிடைத்துள்ள மாந்தை கல்வெட்டுகளிலிருந்தும், சிதம்பரத்துக் கல்வெட்டுகளிலிருந்தும், இந்தக் கோயிலுக்கு சோழர்கள் மற்றும் பாண்டிய மன்னர்கள் திருப்பணி செய்த விவரங்களை அறியமுடிகிறது. இந்தக் கோயிலும் அந்நியர் தாக்குதலில் பாதிக்கப்பட, பின்னர் வன்னி மற்றும் யாழ்ப்பாண அரசர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர். சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரின் முயற்சியால் கோயில் புதுப்பிக்கப்பட்டு, ஆதியில் இருந்தது போன்றே சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டது. திருப்பணியின்போது சிவலிங்கம், நந்தி, விநாயகர் சிலைகள் கிடைத்தன. அங்கே கிடைத்த பெரிய சிவலிங்க மூர்த்தியை வெளியில் எடுத்த போது பின்னம் அடைய, அவரை பிராகாரத்தில் எழுந்தருளச் செய்தனர். இவரே ஸ்ரீமகாலிங்கம்!
ஸ்ரீசரபர், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீசனீஸ்வரர் ஆகியோரைத் தரிசிக்கலாம். பிருகு முனிவரும் மாலியவான் மன்னனும் இங்கு வழிபட்டுள்ளனர். இங்குள்ள பாலாவி தீர்த்தத்தில் நீராடி முன்னோர் வழிபாடு செய்ய, கயாவில் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்; பிரம்மஹத்தி முதலான பாவங்கள் நீங்கும்!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com

திருகோணமலையும்… திருக்கேதீச்சரமும்..!