புண்ணியம்

புண்ணியம் என்ற சொல்லுக்கு, “புனிதமானது, மங்களமானது, நல்லது, ஒழுக்கமானது,” என்று பல அர்த்தம் உண்டு. எண்ணம், சொல், செயல் என்று பலவகைகளில் செய்யப்பட்ட நல்வினைகளையும் புண்ணியம் என்று சொல்வார்கள். செயலை மட்டுமல்லாமல் அவற்றின் விளைவுகள் அனைத்தையும் புண்ணியம் என்றும் கொள்வதுண்டு. லௌகீக வாழ்க்கையிலிருந்து நம்மை உயர்த்தி நமக்கு நன்மை செய்யும் செயல்கள் அத்தனையும் புண்ணியம்தான். தான தருமம், பிறருக்கு நல்லது நடக்க வேண்டும் என்று உயர்வாய் நினைப்பது, பிறருக்கு ஆறுதலாய் நாலு வார்த்தை பேசுவது, இது போன்ற செயல்களின் விளைவுகள் புண்ணியம் என்று சொல்லப்படுகின்றன. அதே போல் பிரார்த்தனை செய்வது, தீர்த்த யாத்திரை செல்வது, ஏன், தியானம் செய்வதும்கூட் புண்ணிய காரியம்தான். இது ஒவ்வொன்றுமே புண்ணியம்தான்.

நம் எண்ணம், பேச்சு, செயல் எல்லாம் புண்ணியம் பெற்றுத்தருவதாக இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை இந்து சமயங்கள் அளிக்கின்றன. இதனால் நல்ல இணக்கமான ஒரு சூழல் உருவாகிறது என்பது மட்டுமல்ல. இந்த நல்வினைகளின் பயனாய் நிறைய புண்ணியம் சேர்த்துக் கொண்டு இப்பிறவியின் பின்னாட்களிலோ அல்லது மறுபிறப்பிலோ அவற்றுக்கான நற்பயன்களை அனுபவிக்க முடியும் என்ற நம்பிக்கைக்கும் இடம் கொடுக்கின்றன. புண்ணிய எண்ணங்களும் செயல்களும் லௌகீக வாழ்விலிருந்து உயர்த்தி நம்மை மோட்சத்துக்கு இட்டுச் செல்வது மட்டுமல்லாமல், உலக உயிர்கள் எல்லாமே நலமாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்பவும் உதவுகின்றன.

பிற சமயங்கள் நம்புவது போல், புண்ணியச் செயல்களின் பலன் இறப்புக்குப்பின் சொர்க்கத்தில் போய்ச் சேர்ப்பது மட்டும்தான் என்று இந்து மரபுகள் பிரச்சாரம் செய்வதில்லை. இந்து சாஸ்திரங்களில் சொர்க்கத்தைப் பற்றி பேசப்படுகிறது என்பது உண்மைதான், ஆனால் புண்ணியச் செயல்களின் பல நன்மைகளுள் ஒன்று மட்டும்தான் சொர்க்கம் சென்று சேர்வது. சொர்க்கம் மட்டும்தான் எல்லாம் என்று சொல்வதில்லை.

புண்ணியம் பற்றி பேசும்போது அங்கு சமய உணர்வுகள் வெளிப்படுவது உண்மைதான் ஆனால் மனிதனின் ஒட்டுமொத்த அற, ஆன்மிக வளர்ச்சிதான் இந்து சமயங்களின் மைய நோக்கம். இதன் நீட்சியாய் சமூகம் முழுமையும் நலமாய் வாழ் வேண்டும் என்ற லட்சியம் இருக்கிறது.

புண்ணியம்
Scroll to top